நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 55 புதிய விடுதித் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் புதிய விடுதிகள் கட்டப்படவுள்ளன.
ரஜரட்ட மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகங்களில் தலா 7 விடுதித் திட்டங்கள் மூலம் 2,200 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்படவுள்ளன.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2,000 மாணவர்களுக்காக 6 விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
கிழக்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களில் முறையே 1,600 மற்றும் 1,800 மாணவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இவற்றுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர, வவுனியா, வயம்ப, யாழ்ப்பாணம், மொரட்டுவ, ருஹுண, கம்பஹா விக்ரமாராச்சி ஆகிய பல்கலைக்கழகங்களும் திருகோணமலை வளாகமும் புதிய விடுதி வசதிகளைப் பெறவுள்ள நிறுவனங்களுள் அடங்குகின்றன.
இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் தற்போது விலைமனுகோரல், மதிப்பீடு அல்லது கொள்முதல் கட்டங்களில் இருப்பதுடன், ருஹுண பல்கலைக்கழகம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.










