தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக தமிழ் மக்களிடம் ஊடகங்கள் வாயிலாக அவர் உதவி கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது முதற்கட்ட அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதி குறுகிய காலத்திற்குள் திரட்டப்பட்டது.
இந்நிலையில், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர்,
தனது அறுவைச் சிகிச்சை முழுமையாக நிறைவடைந்த பின்னர், சிகிச்சைக்குப் போக மீதமிருக்கும் பணத்தை சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கும், விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பத்துக் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும், அவர்களின் நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
மேலும், தனக்கு உதவியளித்த நபர்கள் எவ்வித விசாரணை அழுத்தங்களுக்கும் உள்ளாகக் கூடாது என்பதில் தான் கவனமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,
இன்னும் சிறிது காலம் சென்ற பின்னர், தனது சிகிச்சைக்கு உதவியவர்களின் விபரங்களை முறையாகவும் பகிரங்கமாகவும் வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.










