சட்டவிரோதமான முறையில் 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அவற்றை விடுவிப்பதற்காகப் பல இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேயங்கொட பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் இராஜகிரிய பகுதியில் வைத்து ஒன்லைன் நிதி மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 19 சீனப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது கட்டுப்பாட்டின் கீழ் சட்டவிரோதமாக வைத்திருந்துள்ளார்.
பின்னர், அந்த 19 சீனர்களினதும் கடவுச்சீட்டுகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பதற்கு, நபர் ஒருவரிடமிருந்து தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் (மொத்தம் 5.7 மில்லியன் ரூபாய்) இலஞ்சமாக வழங்குமாறு அவர் வற்புறுத்தியுள்ளார்.
இந்த இலஞ்ச பணத்தைக் கோரும் பேரம்பேசலானது குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியினால் இடைத்தரகராகச் செயற்பட்ட பெண் ஒருவர் மூலமாகவே சீனத் தரப்பிற்குத் தொடர்பு கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சட்டவிரோதப் பணக் கோரிக்கை மற்றும் கடவுச்சீட்டு முடக்கம் குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினால் உரிய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கிவிட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை வேயங்கொட பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பொலிஸ் பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.










