மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீப்பரவல் குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி நகரசபை, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், காத்தான்குடி பொலிஸார் மற்றும் அப்பகுதிப் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.
கடுமையான பிரயத்தனத்தின் கீழ் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தீ பரவல் காரணமாக குறித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு-கல்முனை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதன்போது மாற்று வீதியை பயன்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.













