பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைந்து விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
வடக்கு மாகாணத்துக்கு இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், மன்னார் மாவட்டத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் களப்பயணம் மேற்கொண்டு காணி விடுவிப்புத் தொடர்பான நேரடி ஆய்வுகளை முன்னெடுத்தனர்.
இந்த ஆய்வுகளின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகர், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இவர்களுடன் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என்ற உறுதிமொழிக்குச் செயலுரு கொடுக்க வேண்டியது அதிகாரிகளாகிய அனைவரினதும் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகர், காணி விடுவிப்புத் தொடர்பில் மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும், எனவே விடுவிக்கக்கூடிய காணிகளை விரைந்து விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.









