நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்துச் சேவையைச் சீராக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நெடுந்தீவு மக்களுக்கான கடல் போக்குவரத்துச் சேவையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தாமதிக்கப்படுவது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நெடுந்தீவு மக்களின் கடல் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் நாளாந்தம் எனக்குப் பல தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணமுள்ளன.
இப்பிரச்சினை இன்று மட்டுமல்ல, கடந்த எமது ஆட்சிக் காலத்திலும் இருந்ததுதான்.
ஆனால், அன்று இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டபோது, நாம் உடனடியாக ஏதோவொரு மாற்று வழியில் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்திருந்தோம்.
தற்போது நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பிரதான படகுகளான ‘குமுதினி’, ‘வடதாரகை’ மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய மூன்றுமே பழுதடைந்து, திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாற்று வழியின்றி மக்கள் பெரும் அல்லல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்துச் சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுத்து வருகின்றது.
எமது ஆட்சிக் காலத்தில், இப்போக்குவரத்துப் பொறுப்பை வீதி அபிவிருத்தி அதிகார சபையே ஏற்க வேண்டும் என நாம் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து வலியுறுத்தியிருந்தோம்.
அதற்கமைய, அவர்களும் அதனை ஏற்று இன்றுவரை இலவச போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தனர்.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆழ்க்கடல் பரப்பில் சேவையில் ஈடுபடக்கூடிய ஆற்றலுள்ள படகொன்றை தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்தி, மக்களுக்கான கடல் போக்குவரத்துச் சேவையைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நெடுந்தீவு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான ‘தேவா ரதம்’ என்ற படகும் தற்போது பழுதடைந்த நிலையிலேயே உள்ளது.
எனவே, கொழும்பிலுள்ள தேசிய கூட்டுறவுச் சபையுடன் பேசி, குறித்த படகைத் திருத்துவதற்கான கடனுதவியைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி வழிவகை செய்ய வேண்டும்.
அத்துடன், இக்கடனுதவியை நெடுந்தீவுக்கு மட்டுமன்றி, தீவகப் பகுதியிலுள்ள அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேசிய கூட்டுறவுச் சபையின் ஊடாக ஓர் இலகு கடனாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய பொருளாதாரச் சூழலில் மக்கள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றங்களை எதிர்கொண்டுள்ளதால், தீவகக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு இலகு கடன் கிடைப்பதன் மூலம் மக்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் மலிவு விலையில் இலகுவாகக் கொண்டு சேர்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.” – என்றார்.










