தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல், செயற்பாடுகளை முன்கொண்டு செல்லாத நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக்கழகம் தனது 56 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய அணிக்கு 11 போர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் படுவான்கரை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியில் 29 அணிகள் களம் கண்டிருந்தது.
இதில் கரவெட்டி ஆதவன் அணியும், காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் நேற்று(03) மாலை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் தண்ட உதை மூலம் காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் வெற்றி பெற்று ராஜாவின் விளாவூர் யுத்தத்தின் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும், நான்காவது இடத்தினை கொல்லநுலை விவேகானந்தா அணியும் பெற்றுக்கொள்ள சிறந்த நன்னடத்தை அணியாக நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டது.
2026 ஆம் ஆண்டு சுற்றுப்போட்டியின் நாயகனாக கரவெட்டி ஆதவன் அணி வீரர் த.ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு சிறந்த பந்துக் காப்பாளராக கரவெட்டி ஆதவன் அணியின் பந்துக் காப்பாளர் ச.நிலுக்சனும்(அஜித்), சிறந்த பின்கள வீரராக காஞ்சிரங்குடா நாக ஒளி அணியின் விமலநாதனும் மற்றும் சிறந்த வீரராக காஞ்சிரங்குடா நாகஒளி அணியின் சிவகாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.
சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
ராஜா விளையாட்டுக் கழக தலைவர் இ.அபிலாஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாக சபையினர், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், விளாவட்டவான் ஆலய நிர்வாக சபையின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
வடகிழக்கு எங்கும் இருக்கின்ற பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல், விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் போதியளவு இல்லாமல், வசதிகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருக்கின்ற பொழுதும், எமது வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் விளையாட்டு வீரர்கள் பல சாதனைகளை மாவட்டங்கள் கடந்தும், தேசிய ரீதியிலும், தேசியத்தைத் தாண்டி பல்வேறு நாடுகளிலும் ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கையில், அவர்களுக்குப் போதிய வசதிகள் இருக்கின்ற பொழுது எமது சமூகம் இன்னும் எவ்வாறான நிலைமைகளில் மிக முன்னோக்கியதாக இருக்கும் என்பதை நாம் எதிர்வு கூறக்கூடியதாக இருக்கின்றது.
உண்மையிலே கடந்த காலங்களில் தான் அரசுகள் அவ்வாறான ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று கூட அதற்கான நிவர்த்திப் பணிகள் அல்லது நிவர்த்திகள் செய்யக்கூடிய அளவு இன்றைய அரசாங்கம் கூட முன்னிக்கவில்லை அல்லது முழு ஈடுபாட்டுடன் அதற்குரிய செயற்பாட்டை ஆதரிக்கவில்லை அல்லது முன்னோக்கிக் கொண்டு செல்லவில்லை என்பதையே நாங்கள் இங்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இருந்தாலும், நாம் ஒரு சுயசார்பு அடிப்படையில் எமது மக்களின் வரிப்பணத்திலே மிகப்பெரிய அளவு பங்கினை வகிக்கின்ற இந்தச் சூழலில், எமக்கான பொருளாதாரச் சலுகைகள் அல்லது பொருளாதார உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். அந்த வகையிலே இந்த அரசாங்கத்திற்கும் அந்தப் பொறுப்பு இருக்கின்றது.
விளையாட்டுகள் உண்மையிலேயே உடற்பயிற்சிகள் மட்டுமல்லாது, தனிமனித ஒழுக்கத்தையும், கூட்டுப் பொறுப்பையும், தலைமைதாங்கும் உணர்வுகளையும், தோல்விகளைச் சகித்துக் கொள்கின்ற மனப்பக்குவத்தையும், வெற்றிக்காக ஒரு அணியாக உழைக்கின்ற தன்மையையும் தருகின்றது. ஆகவே, இன்றைய இளைஞர் சமுதாயம் இவ்வாறான விளையாட்டுக்களிலே குழுவாக ஈடுபட வேண்டும். விளையாட்டுக்கழகங்கள் இளைஞர்களை வலுப்படுத்துகின்ற வேலைப்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இந்தச் சூழலில் எமது தமிழரசுக் கட்சியின் ஊடாகப் பல வேலைத்திட்டங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிரதேசத்தின் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்காக முழுமையாக ஈடுபடுவோம். கடினமான உழைப்பின் மூலமே நாம் பல வெற்றிகளை எதிர்காலத்தில் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையோடு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் என்றார்.



















