பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பட்டிப்பளையில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை மற்றும் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டிலும் பட்டிப்பளை கிளையின் தலைவருமான அ.கருணாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து மே தின ஊர்வலம் பட்டிப்பளை விளையாட்டு மைதானம் வரையில் சென்றது.
இந்த ஊர்வலத்தில் மே தினத்தினை குறிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளை ஏந்திய வகையில் பேரணியானது மே தினம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தது.
இதன்போது முச்சக்கர வண்டி சாரதிகள் அமைப்பு, விவசாய அமைப்பின் உறுப்பினர்கள், முச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்களின் பேரணி மற்றும் மீனவர்கள் தமது படகுகளையும் அணிவகுப்பாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து குறித்த மைதானத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதின நிகழ்வுகள் நடைபெற்றன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைப்புகளின் பிரகடன உரைகள் நடைபெற்றதுடன் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினால் மேதின பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.
இன்றைய நிகழ்வின்போது வழமைக்கு மாறாக பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் வீதி தடைகளும் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

















