இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவையினர் முக்கிய கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகரிலுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களைத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஈழத் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இச்சந்திப்பின் போது, ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் சமகால சவால்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்
- சமஷ்டி அரசியல் தீர்வு:
இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் அடிப்படையிலான சமஷ்டி அரசியல் தீர்வுக்கு இந்திய அரசியல் கட்சிகள் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. - சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை:
தமிழர் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணையை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியான ஆதரவை வழங்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. - மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு:
இந்திய மற்றும் இலங்கை தமிழ் மீனவர்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைதாண்டிய மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு, இருதரப்பு வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையிலான நிரந்தரத் தீர்வைக் காண வேண்டியதன் அவசியம் குறித்து ஆராயப்பட்டது. - அகதிகள் நலன்:
தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. - சர்வகட்சி குழுவுக்கான கோரிக்கை: ஈழத் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியான அரசியல் தீர்வை நோக்கிய அழுத்தங்களை வழங்கும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ‘சர்வகட்சி குழு’ ஒன்றை அமைத்து, ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
இச்சந்திப்பில், தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்), செல்வராசா கஜேந்திரன் (பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி), ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா (தலைவர், ஜனநாயகத் தமிழரசுக் கட்சி), தருமலிங்கம் சுரேஷ் (தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசியப் பேரவை), சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் (பேச்சாளர், தமிழ்த் தேசியப் பேரவை), சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் (கொள்கைப் பரப்புச் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரவை) ஆகியோர் பங்கேற்றனர்.










