கொழும்பு, சஹஸ்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று சஹஸ்புர பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரால் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரது அடையாள விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, உயிரிழந்தவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 4 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அவர் வெள்ளை நிற தலைமுடியைக் கொண்டதுடன், இறக்கும் போது கறுப்பு நிற சட்டை மற்றும் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்கிடமான இந்த மரணம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










