வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதி என்பவற்றின் சீரமைப்புப் பணிகள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சீரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ள குறித்த பாலத்தையும் அதனோடு இணைந்த வீதியையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் பிரதான வீதியிலிருந்து பனைநின்றான் கிராமத்திற்குச் செல்லும் பாலமும் அதனோடிணைந்த வீதியும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று கடந்த 2025.07.19ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த வீதி மற்றும் பாலத்தினைச் சீரமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இத்தகைய சூழலில் தற்போது குறித்த பாலம் மற்றும் பாலத்தோடு இணைந்த ஒருபகுதி வீதியையும் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன்பேது புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.கிரிதரன், சமூகசெயற்பாட்டாளர் கு.கஜீபன் ஆகியோரும் இந்த களவிஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்திருந்தனர்.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் 2026ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியில், பாலம் மற்றும் அதனோடிணைந்த ஒருபகுதி வீதியைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.













