ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயற்றிட்டமான லன்டேன் செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம் என்றும், இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகக் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ‘லன்டேன்’ செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
இந்தச் செயற்றிட்டமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், சர்வதேச குடிவரவு அமைப்பு மற்றும் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றின் கூட்டுப் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியீட்டத்தில், 24 மாத காலப்பகுதிக்கு இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 1,000 ஏக்கர் காணிகளை அரசினால் விடுவிப்பதற்கும், 1,000 நபர்களுக்கு முறையான காணி உறுதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கும் இலக்கு முதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக சுமார் 1,500 குடும்பங்கள் நேரடியாகவும், 2 இலட்சம் பேர் வரை மறைமுகமாகவும் பயனடையவுள்ளனர்.
காணி முரண்பாடுகளைத் தீர்ப்பதன் மூலம் அரசுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை வலுப்படுத்துதல், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றைத் துரிதப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,
“வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் காணிப் பிரச்சினையே பிரதான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. போர் காரணமாகப் பொதுமக்களும் அரச திணைக்களங்களும் காணி தொடர்பான ஆவணங்களை முழுமையாக இழந்துள்ளமையால், இந்தப் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், இந்தச் செயற்றிட்டமானது எமது மாகாணத்துக்கு மிகவும் அவசியமானதாகும். இதனைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
எமது மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்கள் முன்னோடித் திட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தையும் இந்த முன்னோடித் திட்டத்தில் உள்வாங்க முடியுமாக இருந்தால் அது மிகவும் சிறப்பாக அமையும். மேலும், காணித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அந்தத் திணைக்களம் வலுப்படுத்தப்படுவது எதிர்காலத்தில் எமது மாகாணத்துக்குப் பெரும் பயனை அளிக்கும்.” – என்றார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, இந்தத் திட்டத்தை எவ்வாறு வினைத்திறனாக முன்கொண்டு செல்வது மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அமைச்சின் பிரதிநிதிகளுக்கும், ஐ.நா. முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விரிவான ஆராய்வுகள் இடம்பெற்றன.
இந்த விசேட கூட்டத்தில் மத்திய காணித் திணைக்கள அதிகாரிகள், மத்திய விவசாய அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாவட்ட செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.










