நீண்டகாலமாக விவாதத்திற்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாங்கள் நிச்சயமாக ஒழித்து, திருத்தப்பட்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவோம்.
இந்த வரைவு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அது சமர்ப்பிக்கப்படும் போது, கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவு முற்போக்கானது என்பதும், மக்களின் உரிமைகளை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் இது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு புரியும்.”
இந்தச் சட்டம் எந்தவொரு இனம், மதம் அல்லது தனிநபரை இலக்கு வைப்பதற்காக அல்லாமல், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த கால அரசாங்கங்கள் இந்தச் சட்டத்தை நீக்குவதாக பலமுறை வாக்குறுதி அளித்து காலத்தை கடத்தியதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வரைவுப் பணிகளை முடித்துள்ளதாகக் கூறினார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய சட்ட வரைவை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும், அதன்படி இந்த ஆண்டுக்குள்ளேயே பழைய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையைப் பேணும் வகையில் இந்த புதிய சட்டம் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.










