“அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம்” என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஆனால், அமெரிக்காவும் இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல்களை நடத்தியதன் மூலமும், ஹோர்முஸ் நீரிணை, ஓமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் ஈரானியக் கடற்கரைகள் மற்றும் கப்பல்கள் மீது நாசகாரத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டும் தங்களது உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அந்த படை குறிப்பிட்டுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதிலும், அமெரிக்கா ஈரானியத் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து பேணி வருவதுடன், கடந்த சில நாட்களாக இருதரப்பிலும் அடுத்தடுத்துப் பழிவாங்கும் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
“நேற்றிரவு நடத்தப்பட்ட நடவடிக்கை ஒரு எச்சரிக்கை மாத்திரமே” எனத் தெரிவித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, “அத்துமீறல்கள் மீண்டும் தொடருமானால், பதிலடிகள் இன்னும் பரந்த அளவில் இருக்கும்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.









