ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் மூன்று பகுதிகளில், சிற்றூந்தில் வந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் 35 வயதுடைய ஒரு சாதாரண குடிமகன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்குக்கரையின் கல்கிலியா (Qalqilya) நகருக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் கொச்சாவ் யாயிர் (Kochav Yair) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய சிற்றூந்தை துரத்திச் சென்ற பொலிஸார், சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வாகனத்தையும் மீட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றொரு நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்படும் போது கண்ணாடிப் போத்தலொன்றால் பொலிஸாரை தாக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த 5 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேலின் அவசர ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட துப்பாக்கிதாரி, அரபு மக்கள் அதிகமாக வாழும் தாயிபே (Tayibe) என்ற இஸ்ரேலிய நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.
எனினும், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் இந்த தாக்குதலைப் பாராட்டியுள்ள போதிலும், அதற்குப் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









