மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தில், அருவி ஆற்றின் நீரோட்டத்தினால் ஏற்பட்டு வரும் கடுமையான ஆற்றங்கரை அரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக விசேட தலையீட்டை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மன்னார் மாவட்டச் செயலாளரிடம் கடிதம் மூலம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட ஆற்றங்கரை அரிப்பை விடவும், கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ புயலின் பின்னர் இப்பகுதியில் பாதிப்புகள் மிகக் கடுமையான முறையில் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கு குறித்த கடிதம் மூலம் ரவிகரனால் கொண்டுவரப்பட்டுள்ளது.
முத்தரிப்புத்துறை மக்களும், புனித செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தையும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 2026.05.01 மற்றும் 2026.05.25 ஆகிய நாள்களில் குறித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாகவே அவரால் நேற்று (04.06.2026) இந்த அவசரக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘தித்வா’ புயலின் பின்னரான கடுமையான ஆற்றங்கரை அரிப்பினால், இக்கரையோரத்தில் வாழும் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க புனித செங்கோல் மாதா ஆலய வளாகமும் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
மக்களின் வாழிடங்களில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் வேரோடு சரிந்து வருவதுடன், மலசலகூடங்கள் உடைந்து பயன்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அருவி ஆறு பல்வேறு கிளை ஆறுகளாகப் பிரிந்து கடலுடன் கலக்கும் நிலையில், இவ் ஆற்றங்கரை அரிப்புக்கான தற்காலிக அல்லது நிரந்தர தடுப்பு ஏற்பாடுகள் உடனடியாகச் செய்யப்படாவிட்டால், முத்தரிப்புத்துறை கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் அடுத்த 5-10 ஆண்டுகளில் கடலோடு சங்கமிக்கும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.
எனவே, தற்போது நிகழும் பாதிப்புகள் மேலும் தொடராதிருக்கும் வகையில், உடனடித் தற்காலிக ஏற்பாடுகளையும், முறையான திட்டமிடலுடனான நிரந்தர கரையோர அரிப்புத் தடுப்பு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்குமாறு ரவிகரன் எம்.பி ஆல் கோரப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமக்கும் இற்றைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, கிராமத்தின் நிலவரத்தை விளக்கும் வெவ்வேறு காலப்பகுதிகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் (இணைப்பு 01-08), புனித செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தை அவர்களால் ரவிகரனுக்கு அனுப்பப்பட்ட கடிதமும் (இணைப்பு 09) மேற்படி கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் மாதா ஆலய பங்குத்தந்தை ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















