களுத்துறை மாவட்டம், ஹொரணை – அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் இசுரு அனுஷ்க பெரேராவை எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட முதியோர் இல்ல உரிமையாளர், நேற்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியோர் இல்லத்தைச் சட்டவிரோதமாக நடத்தி வந்த இவர், டிக் டொக் மற்றும் முகநூல் ஆகிய சமூக வலைத்தளங்களில் ‘லொகு அய்யா’ அல்லது ‘இசுரு அனுஷ்க’ என்ற பெயரில் சுமார் ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமானவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் பாரிய தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூவர் காணாமல்போயுள்ளனர். மேலும், கடுமையான தீக்காயங்களுக்குள்ளான 6 பேர் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










