யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப் பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நாகர்கோவில் கிழக்கு பகுதியின் காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்தப் பகுதியை முற்றுகையிட்டு
தீவிர தேடுதல் நடாத்திய போது, அங்கு மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சர்வதேச சந்தையில் அதிக பணப் பெறுமதியைக் கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த நிறை மற்றும் அதன் துல்லியமான சந்தைப் பெறுமதி என்பவற்றை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









