ஹட்டன் டிக்கோயா பகுதியில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 27.05.2026 அதிகாலை 5.45 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார்.
செல்லையா மனோஜ் அல்லது மனோஹரன் எனும் 37 வயதுடைய இவர் இதற்கு முன்னர் ஹாலிஎல, வட்டவளை, விக்டன் டிக்கோயா லிந்துலை, பொகவந்தலாவ, புலத்சிங்ஹல, இங்கிரிய மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் நடமாடியுள்ளதுடன், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (26) கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த சந்தேக நபர், இன்று அதிகாலை 5.45 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் இந்த சந்தேக நபரைக் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அல்லது அவரைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.










