கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் உடற்பயிற்சிக்காக செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இது தவிர அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கும் குறித்த குப்பைகள் காற்றினால் பரவி விழுகின்றன.
மேலும், குறித்த காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பியர் ரின்கள், பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்காத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த காணியில் உள்ள குப்பைகளில் நீர் தேங்குவதனால் டெங்கு போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுகிறது.
மேலும், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி காணப்படுவதுடன் தொடர்ச்சியாக சட்டவிரோத குப்பைகள் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன.
அத்துடன் இப்பகுதியில் உள்ள நாய்கள், மாடுகள், காகங்கள் குப்பைகளை உண்பதனால் அயலில் உள்ள கிணறுகள், கால்வாய்கள் அசுத்தமடைகின்றன.
இது தொடர்பில் கல்முனை மாநகர சபையினர் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.












