ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் உடனான போர் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கூறப்படுகிறது. ரஷ்ய செல்வந்தர்கள் சிலர், அவரது ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அவரது உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனால், தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறி, பல வாரங்களாக பதுங்கு குழியில் ஜனாதிபதி புடின் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, பிரபல செய்தி நிறுவனமான, ‘பினான்சியல் டைம்ஸ்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, உக்ரைனின், ‘ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப்’ என்ற ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைக்கு பின், புடின் கடும் அச்சத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ‘கடந்த மார்ச் முதல், புடினின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நவீன மயமாக்கப்பட்ட ரகசிய பதுங்கு குழியில் இருந்தே, அவர் தற்போது போரை வழிநடத்தி வருகிறார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வல்லரசு நாட்டின் தலைவராக வலம் வந்த புடின், இன்று தன் சொந்த நாட்டு ராணுவத்தையும், உக்ரைன் ட்ரோன்களையும் கண்டு அஞ்சி, பதுங்கு குழிக்குள் அடைக்கலமாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.










