அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை பேச்சுவார்த்தையாளருமான மொஹமட் பாகர் கலிபாப் பதிலளித்துள்ளார்.
தேவைப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அமெரிக்காவின் அச்சுறுத்தல்களால் ஏதேனும் பலன் இருந்திருந்தால், அவர்கள் இன்று இருக்கும் விரக்தி நிலையை அடைந்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் தங்களுக்குள் சிந்திப்பதில்லையா? அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
அமெரிக்க தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளியிடும்போது கவனமாக இருப்பது நல்லது. எங்களது ஆயுதப் படைகள் முற்றிலும் வேறுபட்ட முறையில் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன.
அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், ஆனால் களத்தில் செயல்படுபவர்கள் நாங்கள்தான்” என்று மொஹமட் பாகர் கலிபாப் மிகக் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.
முன்னதாக,லெபனானில் உள்ள தங்களது ஆதரவு ஆயுதக் குழுக்கள் உடனடியாக வன்முறைகளை நிறுத்த ஈரான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தவறும் பட்சத்தில் ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.










