சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஜோதிடராக இருந்த 52 வயதுடைய ராமகிருஷ்ணன் என்பவருக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியைச் சேர்ந்த இவர், ஜோதிடம் மற்றும் தோஷநிவாரணப் பூஜைகள் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு தாய் தனது 18 மற்றும் 14 வயதுடைய இரு மகள்களை அழைத்துக்கொண்டு ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்பதால் பரிகாரம் செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து, பரிகார பூஜைக்காக தனது வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துவரும்படி ஜோதிடர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாயார் குழந்தைகளுடன் அவரது வீட்டிற்குச் சென்றபோது, தாயை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறி, இரு சிறுமிகளையும் வேறு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.மேலும், இந்த விடயத்தை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், கூறினால் பெற்றோருக்கு தீங்கு ஏற்படும் என மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயந்துபோன சிறுமிகள் சம்பவத்தை வெளிப்படுத்தாமல் இருந்துள்ளனர்.இரண்டு ஆண்டுகள் கழித்து, இரு சிறுமிகளுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், பால்வினை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையின் போது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட ஜோதிடரை கைது செய்தது. வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.










