கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள அவர், சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இதனைச் சுட்டிக்காட்டியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் எல்லைத் தாண்டும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வாக கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுப்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச சட்டக் கட்டமைப்புகளின் அடிப்படையில் கச்சத்தீவின் மீதான இலங்கையின் இறையாண்மையை இந்திய மத்திய அரசு எப்போதோ ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.
இதனை சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக மாற்றியமைக்க வேண்டுமெனில் இராணுவ நடவடிக்கை மூலம் மட்டுமே சாத்தியம் என்றும், ஆனால் இந்திய அரசு ஒருபோதும் அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்காது என்றும் அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்குச் செல்லும் இந்திய பக்தர்களுக்கு இலங்கை கடற்படை எவ்வித தடையும் விதிப்பதில்லை என்றும், எல்லையைத் தாண்டி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும்போதே அது பெரும் நெருக்கடியாக மாறுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறினார்.










