வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு பிரதேசத்தில், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் துப்பாக்கிகளை வைத்திருந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் இன்று (29) கைது செய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இன்று காலை வாகரை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பி. பி. அமில தலைமையிலான குழுவினர் குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அந்த நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் நான்கு மீட்கப்பட்டதுடன், 28, 32, 42 மற்றும் 48 வயதுகளைக் கொண்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கிகளைக் கொண்டு வேட்டையாடி வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



