விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் வேலணையில் இருவர் நேற்று (17) மாலை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் ஆளுகைக்குள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆனாலும் சிலர் இரகசியமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் வினோத்குமார் தலைமையிலான அணியினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விற்பனைக்கு தயாராக போதைப்பொருட்களை வைத்திருந்த வேலணை, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தமக்கு நாச்சிக்குடாவில் இருந்து போதைப்பொருள் கிடைப்பதாக இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்த நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெருவித்துள்ளனர்.










