அனுமதிப்பத்திரமின்றி உடற்பிடிப்பு நிலையம் (Spa) என்ற போர்வையில் சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த நிலையத்தின் முகாமையாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.பேலியகொட காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நிலையத்தின் முகாமையாளரை கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்த நீதிவான், அவர்களை விடுவிக்க உத்தரவிட்டார்.பேலியகொட டயர் சந்திக்கு அருகில் நீண்டகாலமாக இந்தச் சட்டவிரோத தொழில் இடம்பெற்று வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காவல்துறையினர் இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், கைது செய்யப்பட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான நோய்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறும் காவல்துறையினருக்கு நீதிவான் இதன்போது அறிவுறுத்தினார்.










