மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை ரி.ஜீவராஜ் ஆகியோர் பங்குகொண்ட ஊடக சந்திப்பு மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சிவயோகநாதன், “ஆகஸ்ட் 30 ஆம் திகதி என்பது சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்றைய தினத்தில் 3000 நாட்களுக்கு மேலாக தமது உறவுகளை தேடி அலைந்து கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் வடக்கு, கிழக்கு சங்கத்தினரால் ஒரு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அந்தப் போராட்டமானது உண்மைக்கும், நீதிக்குமாக நீண்ட காலமாக தமக்கான தீர்வு வேண்டி போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உள்ளகப் பொறிமுறை ஊடாக இதுவரை காலமும் இதுவித நீதியும் கிடைக்கப்படாததன் காரணத்தினால் தொடர்ச்சியாகவே அவர்கள் சர்வதேச நீதியை வேண்டி போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த மக்களின் உண்மையான போராட்டம் நியாயமானதாகவும், நீதியான ஒரு போராட்டமாகவும் இருப்பதனால் எதிர்வரும் 30 ஆம் திகதி, அதாவது நாளை காலை 10 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கும் பேரணியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவரையிலும் சென்றடையும். அதேபோன்று யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் ஆரம்பிக்கப்படும் பேரணியானது செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் இடம் வரை நடைபெற இருக்கின்றது.
இரு போராட்டங்களும் நியாயமானதாகவும், உண்மைக்கானதாகவும், நீதியான ஒரு போராட்டமாகவும் தொடர்ச்சியாக இருக்கும். இந்த மக்கள் மிகவும் கண்ணீரும், கவலையுடனும் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். தமிழ் மக்களாகிய அனைவரும் வந்து இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அனேகமாக இளையோர்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் இளையோர்கள், விளையாட்டு கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைத்து பிரிவுகளில் இருக்கின்ற அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு வந்து வலுச்சேர்த்து அவர்களது நியாயமான போராட்டத்திற்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்து அதில் தாங்களும் ஒரு பங்குதாரராகி இந்த மக்களுக்கான நீதி கிடைப்பதற்கு தங்களுடைய ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அதே நேரத்தில் இந்தக் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தினை சிதைக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது அவர்களை உள்ளடக்கிய ஒரு அலுவலகமாக பொய்யான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றது. ஆனால் உண்மையாகவே இதில் காணாமல் போனவர் என்பது வேறு காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது வேறு. இந்த உண்மை அறிந்ததன் பிரகாரம் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் வடக்கு கிழக்கில் சேர்ந்து வருகிறார்கள். ஓ. எம். பி அலுவலகம் மூலம் எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதனை அவர்கள் மிகத் தெட்டத் தெளிவாக விளங்கி வைத்திருக்கின்றார்கள்.
எனவே தயவு செய்து சில அரசியல்வாதிகள் மற்றும் பலர் சர்வதேச தூதரகங்கள் கூட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினை காணாமல் போனோர் அலுவலகம் மூலமாக பெற்றுக் கொள்வதெல்லாம் என்பது உண்மைக்கு புறம்பானது. அதில் எந்த ஒரு உண்மையும் இல்லாத செய்தியாகும். எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் என்பது பொறுப்புள்ள ஒரு அரச இராணுவத்தினரும் மற்றும் முப்படையினர்களிடமும் கையளிக்கப்பட்டது. அதில் சிறு குழந்தைகள் இருந்தனர், கர்ப்பிணி தாய்மார்கள் இருந்தார்கள், சமயத் தலைவர்கள் இருந்தார்கள், அவர்கள் அனைவரையும் நீங்கள் கொண்டு சென்றீர்கள்.
உரிமை உள்ள அரசாங்கம் என்கின்ற வகையில் அவர்களை பெற்றோர்களாகவும், தங்களுடைய கணவர்களாகவும், மனைவிகளாகவும் அங்கிருந்து ஒப்படைத்தார்கள். அவர்கள் இதுவரை எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்கின்ற எந்த ஒரு கதையும் இல்லாமல், எந்த ஒரு தெளிவும் இல்லாமல் அதே நேரத்தில் எந்த ஒரு தெளிவூட்டலும் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் செய்யாததன் காரணத்தினால் தான் அவர்கள் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தினை சர்வதேச நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கம் கூட இராணுவத்தினரை பொறுப்புக்கூறுவதற்கு நாங்கள் தயார் இல்லை என்ற விடயத்தினை இந்த அரசாங்கம் கூட கூறி இருப்பதன் காரணத்தினால்தான் நாங்கள் மீண்டும் மீண்டும் சர்வதேச பொறிமுறைக்கு ஊடாக அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம்.
எனவே நாளைய தினம் நடைபெற இருக்கின்ற மிகப்பெரும் பாரிய கவனயீர்ப்பு போராட்டமானது வெற்றி அளிக்க வேண்டும். நியாயமான இந்தப் போராட்டத்திற்கு சர்வதேசத்தின் கதவுகள் தட்டப்பட வேண்டும். அதேபோன்று உண்மைக்கு புறம்பாக நடைபெற்ற இந்தக் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் சர்வதேச நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டு இவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அருட்தந்தை ஜீவராஜ், “காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற இருக்கின்ற தமிழ் மக்களின் உரிமை கோரி அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள், துன்பங்கள், அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து வன்முறை செயல்களுக்கும் நீதி கோரிய ஆர்ப்பாட்டமாக நாளைய நாளில் காலை 10 மணிக்கு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரைக்குமாக ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற இருக்கின்றது.
இந்த நிகழ்வினை யாழ்ப்பாணத்திலும், நாளை காலை 10 மணிக்கு கிட்டு பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு செம்மணி புதைகுழி இடத்தினை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக நாங்களும், சமூக செயற்பாட்டாளர்கள், மக்களுக்கு உரிமைக்காக செயல்படுகின்ற அமைப்புகள், மத குருமார் அமைப்புகள், ஒன்றியங்கள் அனைத்தும் சேர்ந்து இந்தப் போராட்ட பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் உங்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.
இன்றைய நாளிலே ஒரு சமூக செயற்பாட்டாளராகவும், ஒரு மத குருவாகவும் நானும் இந்தப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதோடு நாளைய நாளில் கலந்து அவர்களது அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு அவர்களது கைகளை வலுப்படுத்த எல்லோரையும் தாழ்மையுடன் உரிமையோடு வேண்டிக் கொள்வதுடன் நாளை காலை 10:00 மணிக்கு கல்லடி பாலத்துக்கு அருகில் அனைவரும் ஒன்று கூடி அங்கிருந்து அந்த ஆர்ப்பாட்டத்தினை தொடங்கி நாங்கள் அனைவரும் மக்களது உரிமைக்கான இந்தப் போராட்டத்தினை வலுச்சேர்த்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள், மதகுருமார் ஒன்றியங்கள் போன்ற அமைப்புகள் இதில் வந்து கலந்து இந்த நிகழ்வினை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.










