“இம்முறை சிறுபான்மை சமூகம் தேர்தலில் நல்லதொரு தீர்வை வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் அனைத்து சிறுபான்மை தலைமைகளும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவை” என முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (08) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது, “நடந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் இந்த நாட்டினுடைய சிறுபான்மை சமூகம் அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிறுபான்மை தலைவர்கள் இந்த நாட்டினுடைய சகல மக்களினதும் அங்கீகாரம் பெற்ற தேசிய மக்கள் சக்தி முதலான கட்சிகளின் தலைவர்களுக்கும் பல உண்மைகளை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் , ஜே.வி.பி உடைய செயலாளர் ரில்வின் சில்வா அவர்களும் நாட்டினுடைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவர்களுடைய அமைச்சர்களும் இந்தத் தேர்தலை மாபெரும் வெற்றியாக வெளிக்கொணர்கின்ற போதும் கூட நடந்து முடிந்த பொதுத் தேர்தலை விட 20 இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள். தங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டும் என்பதை முஸ்லீம் சமூகம் சொல்லுகின்ற, உரிமைகளை கதைக்கின்ற போது, இனவாதம் மதவாதம் என்று கூறுவதை விட்டு விடுங்கள்.
அதே போன்று வடபுலம் தமிழ் மக்கள் கைகளிலே இல்லை. அது தேசிய மக்கள் சக்தியிடமிருந்து அதிகாரத்தை பெற்றுக் கொள்வோம் என்று சொல்வதை விட அந்த பிரதேசத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சிக்கும், விக்னேஸ்வரன் தலைமையில் இருந்த ஜனநாய முண்ணனிக்கும், கஜேந்திரகுமாருடைய இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் அங்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பது மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் சிவநேசதுறை சந்திரகாந்தன் அவர்களுக்கும் 37 க்கு மேற்பட்ட உறுப்பினர்களையும் ஒரு சபையையும் வழங்கியிருப்பதில் இருந்து ஈ.பி.டி.பி கூட அங்கு தீவுப் பகுதியில் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்ற நேரத்தில் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தனித்து மாபெரும் சக்தியாக ஒன்றினைவதன் மூலம் தமது பலத்தை நிரூபித்து காட்டலாம். வடக்கு, கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றிணைவதன் மூலம் இதனை செய்யலாம்.
முஸ்லீம் கட்சித் தலைவர்களான அகில மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா ஒன்றினைந்து மாபெரும் சக்தியை வெளிக்காட்டுவதன் மூலம் சரியான பலத்தை காட்டிக் கொள்ள முடியும். தலைவர்கள் மாற வேண்டும். அதே போல ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியை தங்கள் கருத்திற் கொண்டு வருகின்ற இரண்டாம் திகதிக்கு முன்னர் இவர்கள் யார் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே எனது கருத்தாகும்” என்றார்.