இன்றையதினம் யாழ். சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் குறித்த இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் இளைஞனின் சடலம் கரை ஒதுங்கியது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
குறித்த கடல் பகுதியானது பாரிய அலை எழும் பகுதியாக காணப்படுகிறது. இருப்பினும் எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்புகளும் காட்சிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறு மரணம் இதே பகுதியில் சம்பவித்துள்ளன. எனவே உரிய எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






