குளுக்கோமா நோயானது அறிகுறிகள் இல்லாமல் படிப்படியாக கண் பார்வையை இழக்க செய்யும். கண்களை பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம்தான் நாங்கள் இதனை கண்டு பிடிக்கலாம் என கண் வைத்திய நிபுணர் சர்வானந்தம் சந்திரகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நோயை சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் மருந்துகள் அல்லது லேசர் சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும். ஆனால் அநேகமாக சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்த நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்கு வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை நாங்கள் கட்டுப்படுத்துவது கடினமான விடயம்.
இந்த நோயானது சிறிது சிறிதாக கண்ணில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உணர்வது கடினம். பார்வை புலமானது சிறுத்துக்கொண்டு செல்லும். நடப்பது கூட கஷ்டமாக இருக்கும். இது ஒரு அறிகுறி இல்லாத நோய் என்பதால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் அழுத்தத்தை பார்த்து, கண் பின்புறத்தை பரிசோதிப்பதன் மூலம் இந்த குளுக்கோமா நோயினை கட்டுப்படுத்த முடியும் என்றார்.