யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கைப் பார்வையிட்டார்.
இதன்போது துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக அவர் ஆராய்ந்தார்.
ஒளியமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு அமைப்பு தொடர்பாக அவர் ஆராய்ந்ததுடன் அவற்றுக்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றை உருவாக்கித் தருமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரின் பயணத்தின்போது வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாகவும், அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வுகளில் யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன், வேலணைப் பிரதேச செயலாளர் க.சிவகரன் மற்றும் யாழ். மாநகர சபையின் பொறியியலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.