பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் நேற்று பிற்பகல் உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர் பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாரவூர்தி மோதியதில் உந்துருளி வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள தொலைபேசிக் கம்பத்தில் மோதியதால், கம்பம் சரிந்து வீழ்ந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாரவூர்தியின் சாரதி எல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
