போலித்தாலி கொடுத்து 21 பவுண் மோசடி செய்த யுவதி கைது!

0

வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேசமுடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் விசேட நிகழ்வுகளுக்குச் செல்லும்போது, தாலிக்கொடியை இரவலாகப்பெற்று அணிந்து சென்று, பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் வழமைபோல், தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்தபோது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த பெண், அதனை நகைக் கடை ஒன்றுக்குக் கொடுத்து சோதித்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் குறித்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பேரில் , தாலிக்கொடியை வாங்கி சென்ற யுவதியை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது, சுன்னாகம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவலாகப் பெற்ற தாலிக்கொடியை விற்பனைசெய்து, அதே போன்று போலி தாலிக்கொடியை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் குறித்த யுவதியை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.