வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
“அலைகடல் தாண்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிட, ராஜநாகராணியாகப் பேரெழில் கொண்டு ராஜ ரதமேறி வந்தாள் எங்கள் நாகம்மாள்” என்று போற்றும் வகையில், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடல் கடந்து நயினைப் பதியில் ஒன்றுதிரண்டிருந்தனர்.
சுப வேளையில், விசேட பூசைகள் மற்றும் அபிஷேகங்களைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்திலிருந்து அருள்மிகு நாகபூஷணி அம்மன் உள்வீதி வழியாக எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான ராஜ ரதத்தில் வீற்றிருந்தார். அரோகரா கோஷங்கள் விண்ணதிர, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷங்கள் மற்றும் பக்திப் பரவசத்துக்கு மத்தியில் அம்மன் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்மனின் இந்தத் தேரோட்ட நிகழ்வைக் காண்பதற்காக அதிகாலை முதலே நயினாதீவு நோக்கிப் படகுகள் மூலம் பக்தர்கள் தொடர்ச்சியாக வருகை தந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களுக்கான போக்குவரத்து, விசேட குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ஆலய நிர்வாகத்தினராலும் சிவில் அதிகாரிகளாலும் மிகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












