வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் என்பன சேதமடைந்துள்ளன.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பிரதான சந்தை வீதியில் இன்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான சிற்றூர்தி மரக்கறி, பண்டங்களை சந்தைக்கு எடுத்து வருவது வழமை. இச்சமயம் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த வேளை 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தியின் சாவியை திருடி வண்டியை இயக்கிச் சென்றதனால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது மின்சார கம்பம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சமிஞ்சை கம்பம், கடைகளின் பொருட்கள், சைக்கிள் என சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்தினை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சாரதிக்கு தெரியாமல் சிறுவன் சாவியை எடுத்து திருட்டுத்தனமாக சிற்றூர்தியை எடுத்துச் சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















