பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் வைத்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.
அதன்படி, தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆர். மாதவனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. அத்துடன், இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும் இதன்போது ‘பத்ம ஸ்ரீ’ விருதைப் பெற்றுக்கொண்டார்.
அத்துடன், பிரபல மலையாள ஊடகவியலாளர் பி. நாராயணன் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கே.டி. தாமஸ் ஆகியோருக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம விபூஷண்’ விருதை வழங்கினார்.
மேலும், திரைப்படத்துறையில் சாதனை படைத்தமைக்காக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடியரசுத் தலைவர் ‘பத்ம பூஷண்’ விருதை வழங்கிக் கௌரவித்தார்.
இதேவேளை, பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொண்டார்.










