கட்டாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலை வளாகத்தில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் சிக்குண்டு குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 66 பேர் காயமடைந்துள்ளனர்.
ராஸ் லஃப்பான் தொழிற்துறை வளாகத்தில் அமைந்துள்ள, நாட்டின் முதன்மையான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு செயல் அல்ல என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஆலையில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும், ஆலைக்குத் தேவையான பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு திரவ வாயு உற்பத்தி 12.8 மில்லியன் தொன்கள் வரை குறையும் என கட்டாரின் எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராஸ் லஃப்பான் துறைமுகம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானியத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










