ஹட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய தினம் சேவையில் ஈடுபடாத காரணத்தால், நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, ஹோல்புறூக், அல்பியன், டொரிங்டன், பிரஸ்டன், ஆட்லோ, பிரேமோர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களும் தங்களது பணியிடங்களுக்குச் செல்ல பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஹட்டன் அரச பேருந்து நிலையத்தால் பேருந்து சேவையில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக மாற்றுப் பேருந்தொன்றை உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடைமுறைகளை போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ச்சியாக ஏற்படும் போக்குவரத்து குறைபாடுகள் காரணமாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், ஆசிரியர்களின் கடமைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு பொருளாதார இழப்புகளும் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
மாதாந்த பருவகால சீட்டுகளை முன் கூட்டியே பணம் செலுத்தி பெற்று அரச பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனியார் பேருந்துகளில் அதிக அளவில் பணம் செலுத்தி கால நேரத்திற்கு செல்ல முடியாது உள்ளது.
ஹட்டன் போடைஸ் – டயகம பாதையில் தினசரி முறையான மற்றும் தடையற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச நிலைய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இத்தகைய அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.










