தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க இன்றைய தினம் (18) வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டதோடு,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் (2026) ஆம் ஆண்டில் 199 வீடுகளுக்கு 199 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ஏற்கனவே 101 வீடுகளின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக 98 வீடுகளுக்கு அனுமதி வழங்க பட்டுள்ள நிலையில் முதல் கட்ட நிதிக்கான காசோலைகள் வழங்குதல் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.
மன்னார், நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 98 பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மடு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மடு பிரதேச செயலகத்திலும்,முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நானாட்டான் பிரதேசச் செயலகத்திலும்,மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மன்னார் பிரதேசச் செயலகத்திலும் வைத்து காசோலைகள் இன்று வியாழக்கிழமை (18) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் எம். ஹலீம் டீன், பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ச.ஜெயக்குமார் மற்றும் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
“தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் வீடற்ற மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நிலையான வீடமைப்பு வசதிகளை வழங்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










