யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வாய்வின் போது, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டு, முக்கிய சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் அமைந்துள்ள இப்புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போதே, தோண்டப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இந்த இரும்பு வடிவிலான பொருள் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பொருள் நுணுக்கமாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, இந்த வழக்கின் 120ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டது. பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அப்பொருள் நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் வளையல் ஒன்றும் தென்பட்டுள்ளது. எனினும், அது முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படவில்லை.
இன்று அந்த வளையலைச் சீரான முறையில் சுத்தம் செய்து, சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










