ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த திருமதி திலகா சேனா அவர்களின் பூரண நிதிப் பங்களிப்பில், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) நடைமுறைப்படுத்தலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் (IMHO) திட்டப் பணிப்பாளர் திரு. கந்தையா விக்னேஸ்வரனால் நேற்று மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. பி. முத்துலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுமதி அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
மேலும், ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பெருந்தோட்டக் கல்விக்கான இணைப்பதிகாரி திரு. எம். பி. சந்திரசேகரன் அவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நான்கு வகுப்பறைகளைக் கொண்ட இக்கட்டிடத் தொகுதி, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பிரிவு, கணிதப் பிரிவு மற்றும் விஞ்ஞானப் பிரிவு உள்ளிட்ட கல்விப் பிரிவுகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு மேம்பட்ட கல்விச் சூழல் மற்றும் தரமான கற்றல் வசதிகள் கிடைக்கப்பெறவுள்ளன.
இக்கட்டிடத் தொகுதியின் நிர்மாணத்திற்காக சுமார் ஒரு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












