மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் ஒரு மாதத்தின் பின் அவசர அவசரமாக கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரது தந்தையின் சடலமானது விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ஆனால் மயானத்துக்கான கட்டணம் அறவிடப்படவில்லை.
அந்த மாத சபை கூட்டம் நடைபெற்று, கணக்கறிக்கை அனைத்தும் தயாரித்து முடித்த பின்னர் 5ஆம் மாதத்தில் குறித்த பிரச்சினையானது சர்ச்சைக்குள்ளாகி பேசுபொருளானது.
இந்த விடயம் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியவந்த நிலையில் உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
விடுமுறை தினமாக இருந்தாலும் குறித்த வட்டாரத்தில் உள்ள பொது நூலகத்தில் உள்ள படிவத்தினை வாங்கி நிரப்பிய பின்னர் அங்கு உப பற்றுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட பின்னரே சடலத்தை எரிப்பதற்கான அனுமதி வழங்தப்படும்.
பின்னர் அந்த வருமானம் பிரதான கணக்கறிக்கைக்கு கொண்டு செல்லப்படும். இது அனைவருக்கும் பொதுவான நடைமுறை.
ஆனால் இதனால் நடைமுறை குறித்த உறுப்பினர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.
இந்த விடயமானது பூதாகரமாக மாறிய நிலையில் கடந்த 25.05.2026 அன்று அவசர அவசரமாக அந்த உறுப்பினர் அழைக்கப்பட்டு கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.
உறுப்பினருக்கு தனிப்பட்ட முறையில் இந்த விடயத்தில் சலுகை வழங்க முற்பட்டு அது வெளிப்பட்ட நிலையில் இவ்வாறு பற்றுச்சீட்டு வழங்தப்பட்டதா என உறுப்பினர்கள் கடந்த சபை கூட்டத்திலும் கேள்வி எழுப்பினர்.
வடக்கு மாகாண சபையின், உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள மயானங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான நியதிச் சட்டத்தின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், பிரதேச தவிசாளர் அல்லது அதிகாரம் பெற்ற எவரேனும் உத்தியோகத்தரால் விநியோகிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி பிரதேச சபைக்குச் சொந்தமான ஏதேனும் தகன நிலையத்தில் எந்தவோர் பூதவுடலும் தகனம் செய்யப்படுதல் ஆகாது என அந்த நியதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இவை அனைத்தையும் உதாசீனம் செய்துவிட்டே பிரதேச சபையின் மயானத்துக்குள் அந்த சடலமானது எரிக்கப்பட்ட நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது.










