தமிழ் சினிமாத் துறையில் புரட்சியை உண்டு பண்ணிய இயக்குனர் திலகம் பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கலைஞர் கருணாநிதிக்கும் இயக்குநர் இமயத்திற்கும் ஒரு ஒற்றுமையிருந்தது. அது தான் அவர்களின் கட்டைக்குரல். ஆளுமை மிக்க குரல்களை இருவரும் கொண்டிருந்தனர்.
நான் முதலமைச்சராக இருந்த போது பாரதிராஜா யாழ்ப்பாணம் வந்து என்னைச் சந்தித்தார். அவரின் குரலில் இருந்த மிடுக்கைக் கண்டு வியந்தேன். அவர் இருந்த இடம் கலகலப்பாக இருக்கும். சிரிப்புக்கு அளவில்லை. பாசத்திற்குக் குறைவில்லை. அவற்றின் ஊடாக நடைபெற்ற எமது கருத்துப் பரிமாற்றங்கள் இன்றும் செழுமையுடன் மனதில் இருந்து சிலிர்க்க வைக்கின்றன.
சினிமா வாயிலாக தமிழ் மக்கள் மனதில் ஒரு புதிய பரிமாணத்தைப் பரவவிட்டவர் பாரதிராஜா.
அவர் மகனின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. இன்று மகன் சென்ற இடத்திற்கே தந்தையும் சென்றுவிட்டார். அவருடன் அளவளாவ எனக்கு இறைவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்துதவியிருந்தான் என்பது பெருமையாக இருப்பினும் இனி அவரின் குரல் கேட்க முடியாதென்பது மனதை அரிக்கின்றது; சோகத்தைத் தருகின்றது.
இத் தருணத்தில் எந்த உயரம் சென்றாலும் எவ்வளவு ஆற்றல் மிக்கவனாக அவன் வாழ்ந்தாலும் இறுதிச் சங்கமம் பூமிக்கடியிலேயே என்ற பேருண்மை எம்முன் திரையோடி நின்று திகைப்பையும் மன அவதியையுமே தருகின்றது.
பாரதிராஜா புகழ் என்றென்றும் நிலைப்பதாக!
அவரின் கலை வண்ணமும் கலை உள்ளமும் எமது மக்களை ஊக்கப்படுத்தி எமது சினிமாக்கலைஉலகம் உயர்ச்சி பெற உதவுவனவாக! நண்பர் பாரதிராஜா ஆன்மா சாந்தியடைவதாக என குறிப்பிடப்பட்டுள்ளது.










