“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார். அவர் மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்கு வருவார் என நான் நம்பவில்லை” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவுள்ளார் எனவும், அதன் மூலம் புதிய தேசிய அரசு ஒன்று அமையவுள்ளது எனவும் அண்மைக்காலமாக வெளியாகி வரும் அரசியல் தகவல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரப்போகின்றார் என்று அவராக எதுவும் கூறவில்லை. அவரைச் சுற்றியுள்ள ஏனைய நபர்கள்தான் தங்களது சுயலாபங்களுக்காக இது போன்ற கருத்துக்களை ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான அவர், இந்நாட்டில் ஓர் அரசியல்வாதி வகிக்கக்கூடிய உச்சபட்ச பதவிகளை ஏற்கனவே வகித்து முடித்துவிட்டார்.
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில், எவரும் ஏற்றுக்கொள்ள முன்வராத சவாலைத் தான் தைரியமாக எதிர்கொண்டதாகவும், எனினும் பின்னர் நடந்த தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தமையால் தான் தற்போது அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருந்தார். அவர் எடுத்த அந்த தார்மீக நிலைப்பாட்டிலேயே எப்போதும் உறுதியாக இருப்பார் என்று நான் நம்புகின்றேன்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட நலன்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் தன்னிச்சையாகக் கட்சி தாவுவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் ஆணையை மதிக்கும் வகையில் கொண்டுவரப்படும் இந்தச் சட்டமூலத்தை நான் முழுமையாக வரவேற்கின்றேன்.” – என்றார்.










