யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.
இன்று (26) அதிகாலை 6:00 மணியளவில் திருச்செபமாலையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய அருட்பணி சபையினரின் சிறப்பில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆரம்பமானது.
திருப்பலியின் தொடக்கத்தில், வருகை தந்த அருட்தந்தையர்களுக்கு அருட்பணி சபையினரால் மாலை அணிவித்து ஆலய திருப்பீடத்திற்கு பக்திபூர்வமாக அழைத்து வரப்பட்டனர்.
இவ்விழாத் திருப்பலியானது, அமலமரித்தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர், வணக்கத்திற்குரிய பிதா அருட்பணி ஜெயந்தன் பச்சேக் அடிகளாரின் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கடற்கரை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர் பவனி
திருப்பலியின் நிறைவாக, புனித பிலிப்பு நேரியாரின் திருச்சொரூபம் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திரண்டிருந்த மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் தேர் பவனி ஆரம்பமானது.
பக்தர்களின் பக்திப் பரவசக் கோஷங்களுக்கு மத்தியில், செம்பியன்பற்று வடக்கு கடற்கரை பகுதியை நோக்கி தேர் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த தேர் பவனியின் போது தேருக்கு முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்துச் சென்றது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு காட்சியாக அமைந்திருந்தது. பவனியின் இறுதியில் புனிதரின் திருவருள் ஆசீர்வாதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
பிரமுகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் பங்கேற்பு
இவ்விழாவில் செம்பியன்பற்று பங்கின் மைந்தர்கள், அயல் பங்குத் தந்தையர்கள், செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்பணி ஜஸ்டின் ஆதர், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், அரசியல் பிரமுகர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றனர்.
இவ்வாண்டு திருவிழா திருப்பலியைக் கண்டு ஆசிபெற நாட்டின் பல பாகங்களிலிருந்தும், புலம் பெயர் நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தமை இப்பகுதியின் ஆன்மீக எழுச்சியைக் காட்டுவதாக அமைந்திருந்தது.















