மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் பேருந்து நடத்துனர் உட்பட 05 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரையம்பதியில் இருந்து கதுருவெல பிரதேசத்துக்கு பிரயாணித்த தனியார் பேருந்து ஒன்றும் வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிஸ்கட்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதி பாதசாரிகள் வீதியை கடக்கும் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்து பிரயாணிகள் பாரவூர்தியில் சென்றவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் சித்தாண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












