நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கைப் பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப் பின்பற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள அதிகாரசபை, வாகன ஓட்டுநர்கள் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பகல் நேரமாக இருந்தாலும், மழை பெய்யும் போது தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்க வேண்டும்.
வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற வரம்பிற்குள் பேண வேண்டும்.
திடீரென பிரேக் போடுவதால் வாகனங்கள் வழுக்கிச் சென்று விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முற்போகும் வாகனத்திற்கும் தங்களது வாகனத்திற்கும் இடையில் போதியளவு பாதுகாப்பான இடைவெளியைப் பேண வேண்டும்.
மழைக்காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளின் மேற்பரப்பு வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் அதிக அவதானத்துடனும் பொறுப்புடனும் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் வலியுறுத்தியுள்ளது.










