நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழக அரசியல் கட்சியின் தலைவர் சீமானை அச்சுறுத்தும் வகையில் அல்லது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது இந்தியாவுக்கு வரும்போது துப்பாக்கி எடுத்து வர முடியுமாக இருந்திருந்தால் அவரை சுட்டுக் கொலை செய்திருப்பார் என்றும்,
அல்லது யாழ்ப்பாணத்துக்கு சீமான் வந்தால் அவரை சுட்டுக் கொலை செய்வதாகவும் கூறியுள்ளார்.
காணிப் பிரச்சினை ஒன்றில் பெண்ணொருவரிடம் துப்பாக்கி காட்டி உயிரச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவருக்கு வழங்கிய உத்தியோகபூர்வ துப்பாக்கியானது நீதிமன்றத்தினால் கைப்பற்றப்படசாவழக்குக்கு பொருளாக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் அருச்சுனாவின் கருத்தின் அடிப்படையில் நோக்குவோமேயானால் அவரிடம் மேலும் சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது என்று அர்த்தப்படுகிறது.
இந்த அரசின் காலத்தில் பிழையான ஆயுத கலாசாரத்தை உருவாக்குகின்ற நபராக இவர் இருக்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது.
பொதுவாக நாடாளுமன்றத்துக்குள் பேசப்படுகின்ற விடயங்களுக்கு சாதாரணமாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
ஆனால் இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுப்பதுடன் இரண்டு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவினை இலங்கை நாடாளுமன்றத்திற்குள் பேசப்பட்ட விடயம் என்றே குறிப்பிட்டு கண்டனங்களை வெளியிடுகின்றனர்.
இது தேசிய மக்கள் சக்தி அரசுக்கு இழுக்கினை ஏற்படுத்துகின்ற விடயம்.
இந்த விடயமானது தமிழ்நாட்டில் உள்ள கட்சி ஒன்றுக்கு எதிரான விடயம் மட்டுமல்லாமல் இந்தியாவின் இறையாண்மைக்கு இழுக்கான ஒரு விடயம்.
எனவே இனிமேல் இவ்வாறானவர்களின் வருகையை இந்திய அரசு ஏற்றுகொள்ள கூடாது.
ஏனெனில் இந்த மனநோயாளிகள் என்ன செய்வார்கள் என தெரியாது.
இந்த மனநோயாளிகள் அங்கே வந்து அரசியல் தலைவர்களை கொலை செய்துவிட்டால் வரலாற்று ரீதியான ஒரு அவப்பெயரை நாங்கள் பெற்றுக்கொள்ள நேரிடும்.
இந்தியா மட்டுமல்லாது ஏனைய நாடுகளும் இவ்வாறானவர்களுக்கு எதிர்காலத்தில் வீசாக்களை வழங்குவதில் அவதானமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் வாக்களித்த மக்கள் மீதே துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியவர் ஏனையோரை கொலை செய்வதற்கு கொஞ்சமும் அஞ்ச மாட்டார்.
எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இலங்கை – இந்தியா உறவில் விரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
அனர்த்தம் அல்லது பாதிப்புகள் வருகின்றபோது முன்னின்று எமக்கு உதவுகின்ற நாடாக இந்தியா காணப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசாங்கமும் பல உதவிகளை செய்து வருகின்றன.
எனவே இவற்றுக்கு குந்தகம் விளைவிக்காதபடி இலங்கை நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.










