ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும். தமக்கு தேவையானவர்களை பதவிக்கு கொண்டு வந்து அதனுடாக ஊழல் செய்து இறுதியில் அவர்களை காட்டிக் கொடுப்பது ராஜபக்ஷர்களின் கொள்கையாகும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கபில சந்திரசேனவின் நிலைக்கு ராஜபக்ஷர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும். சிறந்த வர்த்தகரான கபில சந்திரசேனவை ராஜபக்ஷர்கள் ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக்கி தமது தேவையை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் வெளிநாட்டு நிறுவனத்தின் வெளிப்படுத்தலுக்கமைவாகவே முறைப்பாடளிக்கப்பட்டு, விசாரணைகள் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடியின் ஒருதொகை நிதியை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக கபில சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்துள்ள பின்னணியில் தான் கபில சந்திரசேன உயிரிழந்துள்ளார்.
ராஜபக்ஷர்கள் கடந்த காலங்களில் ஊழலுக்குரிய சாதகமான சூழலை நிர்வாக கட்டமைப்பில் உருவாக்கினார்கள்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தால் ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டும் அதனை விடுத்து பெரஹராவுக்கு செல்வதை போன்று ஆட்களை திரட்டிக் கொண்டிருக்க கூடாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ராஜபக்ஷர்கள் ஒன்று விதிவிலக்கல்ல என்றார்.










